முன்னணி இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2003-ல் இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.பி. ஜனநாதன். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவருடைய முதல் படமான இயற்கை, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. தற்போது விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் நடித்துள்ள லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
நேற்று லாபம் படத்தின் படத்தொகுப்புப் பணிகளில் இருந்த ஜனநாதன் பிறகு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். மீண்டும் படத்தொகுப்புப் பணிகளுக்குத் திரும்பாததால் அவருடைய உதவியாளர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தார்கள். அங்கு சுயநினைவின்றி இருந்துள்ளார் ஜனநாதன். உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் ஜனநாதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.