தனது இரு படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்த குழப்பத்துக்குப் பதில் அளித்துள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.
சிம்பா என்கிற சூப்பர் ஹிட் படத்துக்கு அக்ஷய் குமார் நடிப்பில் சூர்யவன்ஷி என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கரண் ஜோஹர் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். கத்ரினா கயிப், ஜாக்கி ஷெராப் போன்றோர் நடித்துள்ளார்கள். அஜய் தேவ்கனும் ரன்வீர் சிங்கும் கெளரவ வேடங்களில் நடித்துள்ளார்கள். சூர்யவன்ஷி படம் கடந்த தீபாவளி அன்று வெளிவருவதாக இருந்தது. கரோனா பரவல் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
ரஞ்சித் எம். திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா நடித்துள்ள படம் - பெல் பாட்டம். மே 28 அன்று வெளிவருவதாக இருந்த இந்தப் படத்தின் வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரு படங்களும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் எனச் செய்திகள் வெளிவந்ததால் இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் அக்ஷய் குமார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சூர்யவன்ஷி, பெல்பாட்டம் படங்களைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு என் நன்றி. இரு படங்களும் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று சொல்வது யூகம் தான். இரு தயாரிப்பாளர்களும் வெளியீட்டுத் தேதி குறித்து விவாதித்து வருகிறார்கள். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.