இயக்குநர் ராம் அடுத்ததாக இயக்கும் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு பெயர் பெற்றவர் இயக்குநர் ராம். உலக மயமாக்கலை 'கற்றது தமிழ்' படம் மூலமும், தந்தை - மகள் பாசத்தை 'தங்க மீன்கள்' மூலமும், நவீன காலத்துக் காதலை 'தரமணி' படத்தின் மூலமும், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து 'பேரன்பு' படத்தின் மூலமும் பேசினார்.
இவரது 'கற்றது தமிழ்' திரைப்படம் சிறந்த தமிழ் படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் தேசிய விருது வென்றது. இந்த நிலையில் இயக்குநர் ராமின் அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவியது. இயக்குநர் ராம் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இயக்குநர் ராமின் அடுத்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் ராமின் அடுத்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இதையும் படிக்க | ஆபாசப் பட வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கருத்துக்கு மாதவன் பதில்
'மாநாடு' படத்தை தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார். இதனையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை அஞ்சலி , 'தரமணி', 'பேரன்பு' படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராமுடன் மீண்டும் இணைவது குறித்து நடிகை அஞ்சலி தனது சுட்டுரைப் பக்கம் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.