ரஜினிகாந்த்தின் அடுத்த பட இயக்குநர் குறித்து பரவும் வாட்ஸ்ஆப் தகவல் குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த்தின் 'தர்பார்' திரைப்படம் தமிழகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சமீபத்தில் இந்தப் படம் ஜப்பானில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதிஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது.
இதனையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. அதன் ஒரு பகுதியாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டது.
மேலும், அவரிடம் வாட்ஸ் ஆப் செயலில் ரசிகர் ஒருவர் 'தலைவர் 169' படத்தை நீங்க இயக்குகிறீர்களா? என்று கேட்க, அதற்கு தேசிங் பெரியசாமி , நிச்சயம் நடக்கும் என்று பதிலளிக்கும் இந்த தகவல் இணையத்தில் ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதனை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் தேசிங், இந்த மாதிரி எந்தவித உரையாடல்களும் நடைபெறவில்லை. பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள். நன்றி என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பார்த்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் தேசிங் பெரியசாமியை அழைத்து பாராட்டினார். அப்போது தனக்கு ஏதாவது கதை இருந்தால் கூறவும் என்றும் அவர் அப்போது கூறியுள்ளார்.
No such conversations happened.Kindly request people not to post fake things. Thank you