நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கோவையில் மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், மார்கழியில் மக்களிசையை சென்ற ஆண்டு சென்னையில் நடத்தியபோது மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்ததோடு அதில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் மிகுந்த உற்சாகம் கிடைத்ததன் காரணமாக தான் இந்த ஆண்டு மார்கழி மக்களிசை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் 350 இருக்கைகள் கொண்ட அரங்கில் இந்நிகழ்ச்சியை காண 700 பேர் வந்திருந்தார்கள். சென்னையில் வரும் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் இதுவரை மேடை ஏற்றாத பழங்குடிகளின் இசையை ஒருநாள் முழுக்க மேடை ஏற்ற இருக்கிறோம்.
இதையும் படிக்க | நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை
பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தவரை தண்டிப்பதற்கும் வழக்கு தொடர்வதற்கும் பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர்கள் விலகி இருக்கிறார்களோ என தோன்றுகிறது. குழந்தைகளிடம் பெற்றோர்கள் பேச வேண்டும்.
தமிழக அரசியலில் மேற்கு மாவட்டங்களில் முக்கியமான பங்கு இருக்கிறது. இங்கு அம்பேத்கர் சிலையைக் கூட வைக்க முடியாத சூழ்நிலை தான் இருப்பதாக இங்குள்ள இளைஞர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக நாம் ஆய்வு நடத்த வேண்டியிருக்கிறது. பல தொழிலதிபர்கள் கோவையில் தான் உருவாகி இருக்கிறார்கள்.
அதே நேரம் சாதி படிநிலைகளை தீவிரமாக கடைபிடிக்கும் பகுதியாக இருப்பது என்பது கவலைப்பட கூடிய விசயமாக இருக்கிறது என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதி பேசும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலை உடைத்தெறியப்பட்டு தற்போது சமூக நீதி பேசினால்தான் மக்களிடம் நெருங்க முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது என்றார்.