சூர்யாவின் 'ஜெய் பீம்' படத் தலைப்புக்காக, அந்தப் பட இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் பிறந்த நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் நடிக்கும் படங்களான 'எதற்கும் துணிந்தவன்', 'ஜெய் பீம்' படங்களில் இருந்து முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்தன.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு 'ஜெய் பீம்' பட இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், ''தலைப்புக்கு நன்றி சார்'' என பதிலளித்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் அடிக்கடி 'ஜெய் பீம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
'ஜெய் பீம்' படத்தை ஞானவேல் இயக்க, நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து, வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் நடிகராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் 'கர்ணன்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் அனைவரையும் கவர்ந்த லிஜோ மோல், 'சில்லுக்கருப்பட்டி' புகழ் மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
Thank you for the title sir