பிரபல நடிகை கங்கனா ரணாவத் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கங்கனா ரணாவத், சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வானார். பிரபல நடிகையாக உள்ள கங்கனா பெறவுள்ள 4-வது தேசிய விருது இது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
இந்நிலையில் கங்கனாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:
நான் சோர்வாக உள்ளேன். கடந்த சில நாள்களாக கண்ணில் எரிச்சலாக உள்ளது. இமாசலப் பிரதேசத்துக்குச் செல்வதற்காகப் பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என் உடலில் இந்த வைரஸ் கொண்டாட்டத்துடன் உள்ளது என எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதை நான் எப்படியும் நொறுக்கிவிடுவேன். மக்களே, எதுவும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். நீங்கள் பயந்தால் உங்களை அது மேலும் பயமுறுத்தும். அனைவரும் சேர்ந்து கரோனாவைத் தகர்ப்போம் என்றார்.