சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள 'ஜெய் பீம்' கடந்த நவம்பர் 2 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்தப் படத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் படக்குழுவால் அந்த சின்னம் நீக்கப்பட்டது. இருப்பினும் சர்ச்சை அடங்கவில்லை. பாமகவை சேர்ந்த ஒரு சிலர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்தனர்.
இதையும் படிக்க | கரோனாவை வென்று மீண்டும் 'ரோஜா' தொடரில் களமிறங்கும் நடிகை
இதனையடுத்து பல்வேறு திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 'வி ஸ்டேண்ட் வித் சூர்யா' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
இந்த நிலையில் சூர்யா 'ஜெய் பீம்' படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''ஜெய் பீம் படத்துக்கு நீங்கள் காட்டிய அன்பு என்ன நெகிழச் செய்துள்ளது.
இதற்கு முன்னால் இப்படி ஒரு அன்பை நான் பார்த்ததில்லை. எனக்கு நீங்கள் அளித்த நம்பிக்கைக்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகளில்லை. எங்களுடன் நின்றதற்கு இதயம் கனிந்த நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us