சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கராவுடன் மீண்டும் சூர்யா இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, மோகன் பாபு, ஊர்வசி, அபர்னா பாலமுரளி, கருணாஸ் காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.
இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பல்வேறு விருதுகளையும் வாரிக் குவித்தது. குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. இந்தப் படத்தின் பாடல்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இந்த நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் சிறப்பாக வரவேற்பைப் பெற்ற பாடல் என்ற பெருமையை வழங்கிய சோனி மியூசிக்கிற்கு நன்றி. இயக்குநர் சுதா கொங்கரா, சூர்யா, ராஜசேகர பாண்டியன் ஆகியோருக்கு நன்றி. சூரரைப் போற்று குழு மீண்டும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள சூர்யா, என்னவொரு பாடல்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நாங்கள் இனி எதற்காக காத்திருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். தற்போது சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் இயக்கும் முனைப்பில் இருக்கிறார். அதற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.