'தலைவி' படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்தப் பட கதாநாயகி கங்கனா ரணாவத், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பிரபல தமிழ் நடிகையும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'தலைவி' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
விஜய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கங்கனா ரணாவத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியின் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். அவருடன் இயக்குநர் விஜய் இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.