பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தெலங்கானா மாநிலம் மாதபூர் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாடின்றி சாலையில் விழுந்தார். அப்போது அவருக்கு உடலில் நெஞ்சுப் பகுதி, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது
உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டுள்ளது. பின்பு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு, மூளை மற்றும் இதர முக்கிய பாகங்களில் பாதிப்பு இல்லை. அவரது தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். உடனடியான அறுவைச் சிக்ச்சைகள் அவருக்கு செய்யத் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
விபத்து குறித்து ரெய்துர்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், விபத்தின் போது அவர் தலைக்கவசம் அணிந்ததிருந்தன் காரணமாக அவர் பெரிய காயங்கள் இன்றி தப்பித்திருக்கிறார். வாகனம் ஓட்டும்போது அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சாய் தரம் தேஜ், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனாவார். இவரது தம்பியும் வைஷ்னவ் தேஜ் தெலுங்கில் உப்பெனா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.