நடிகர் சூர்யாவின் கருணை கடலை விடப் பெரியது என பிரபல இயக்குநர் உருக்கமாக பேசியுள்ளார்.
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மதுரை ராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர்கள் ஷங்கர், பாரதி ராஜா, முத்தையா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பாரதிராஜா, ஷங்கர், அதிதி என பலரும் மேடையேறி பேசியபோது ரசிகர்கள் நடிகர் சூர்யாவைக் குறிப்பிட்டு 'ரோலக்ஸ்.. ரோலக்ஸ்' என கத்தியபடி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர், நடிகர் சிங்கம்புலி “சூர்யாவை வைத்து பேரழகன், மாயாவி ஆகிய இரண்டு படங்களை இயக்கினேன். நான் ஒரு இயக்குநாரக பெருமையுடன் குறிப்பிடுவது பேரழகன் படத்தைத் தான். இயக்குநர்கள் பாலாவும் சுந்தர்.சியும் எனக்கு எவ்வளவு முக்கியமானவர்களோ, அதே அளவிற்கு சூர்யாவும் ரொம்ப முக்கியமானவர். ஏழைகளைப் படிக்க வைப்பதைப் போன்ற மிகப்பெரிய விசயத்தை அவர் செய்து வருகிறார். சகோதரர் சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினரின் கருணை கடலைவிடப் பெரியது. அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்திப் பார்த்து மகிழும் ஒரு அற்புதமான மனிதர்” எனக் கண்கலங்கியபடி சிங்கம்புலி பேசிமுடித்தார்.
’விருமன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.