பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம்! கரோனா வைரஸ் பரவல் காலம் என்னை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருப்பது குறித்தும், அதனால் பாட்டாளிகளை சந்திக்க முடியாமல் வாடிக் கொண்டிருப்பது குறித்தும் பலமுறை எழுதியிருக்கிறேன்.
சங்க இலக்கியங்களை படித்தல், நூல்களை எழுதுதல், பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி சொந்தங்களுடன் வாழ்த்து சொல்ல உரையாடி, மரக்கன்றுகள் நடச் செய்தல் இப்படியாகத் தான் எனது நாட்கள் கழிகின்றன.
இடையிடையே சமூகத்திற்கு நல்ல கருத்துகளைக் கூறும் திரைப்படங்களையும் பார்த்தேன். பணிகள் காரணமாக, திரைப்படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடியாது. ஒரு படம் பார்த்து முடிக்க 2 அல்லது 3 நாட்களாகி விடும். அந்த வரிசையில் கடந்த 3 நாட்களாக நான் பார்த்த திரைப்படம் ’கோடியில் ஒருவன்’.
இதையும் படிக்க | 40வது ஆண்டில் கமல்ஹாசன் - ஸ்ரீதேவியின் 'மூன்றாம் பிறை'
ஓர் அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும்.... எவ்வாறு இருக்கக்கூடாது! ஓர் அரசியல்கட்சி எவ்வாறு இருக்க வேண்டும்.... எவ்வாறு இருக்கக்கூடாது!
மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.... யாருக்கு வாக்களிக்கக் கூடாது! என்பதை விளக்கும் திரைப்படம் தான் கோடியில் ஒருவன். இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதனிடையே எனக்கும் பாட்டாளிகளுக்கும் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் சுமார் 1000 என்ற அளவுக்கு குறைந்து விட்டது. இனி எப்போதோ ஒருமுறை திரைப்படம் பார்ப்பதற்கும் விடை கொடுத்து விட்டு, பாட்டாளிகளை சந்திக்க அதிக வாய்ப்பு கிடைக்கும்.
உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள், பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கைகள் வெளியீடு ஆகிய பணிகள் முடிவடைந்த பிறகு மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன். இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.