தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபு மற்றும் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்தத் தகவல் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விக்ரமின் மேலாளர், இந்தத் தகவலை மறுத்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், நண்பர்களே மகேஷ் பாபுவுடன் இணைந்து விக்ரம் நடிக்கவிருப்பதாக வெளியான செய்தி பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மகான் படத்துக்கு பிறகு விக்ரம் நடிப்பில் கோப்ரா படம் வெளியாகவிருக்கிறது. லலித்குமார் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக நடித்துள்ளார்.
இதனையடுத்து விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரமின் 61வது படமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.