நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள பட டீசரில் நடிகர் சிவாஜி கணேசனின் கௌரம் பட வசனத்தை நடிகர் மம்மூட்டி ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார்.
ஆமேன், அங்கமாலி டைரிஸ், ஈமாயூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவரது ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மம்மூட்டி முதன்மை வேடத்தில் நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மறைந்த நடிகர் பூ ராமு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க | 2 கோடி பார்வை கடந்த ‘பொன்னியின் செல்வன்’ டீசர்
பூ ராமு மறைவுக்கு நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பூ ராமுவின் மறைவைக் கேட்டு வருத்தமடைந்தேன். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் பங்குபெற்றதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
நண்பகல் நேரத்து மயக்கம் பட முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், தற்போது இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் மதுக்கூடம் ஒன்றில் மது அருந்தும் மம்மூட்டி, இரட்டை வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்த கௌரம் பட வசனத்தை அட்டகாசமாய் பேசி அசத்தியுள்ளார்.
நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை நடிகர் மம்மூட்டியின் மம்மூட்டி கம்பெனி நிறுவனமும் ஆமென் மூவி மோனஸ்டெரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.