
ஜெய்பீம் தொடர்பாக சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார்.
இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என நடிகர் சூர்யா மீதும் இயக்குநர் ஞானவேல் மீதும் சந்தோஷ் என்பவர் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் புகார் அளிக்கும் முன்பே நீக்கப்பட்டதாகவும் அதனால் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சூர்யா மற்றும் ஞானவேல் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க | ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?
இதனையடுத்து சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என நீதிபதி கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...