இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்து 'நானே வருவேன்' பட இசை குறித்து முக்கிய தகவலை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
அவரது பதிவில், ''நானே வருவேன் படத்தின் இசை பணிகள் நிறைவடைந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். பாடல்களை விரைவில் வெளியிடுமாறு ரசிகர்கள் அவரிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சமந்தாவின் 'புஷ்பா' பாடல் குறித்து நடிகை பிரியாமணி அதிரடி கருத்து
நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார்.
யுவன் இசையமைத்த 'வலிமை 'படத்துக்கு பின்னணி இசையை அவருக்கு பதிலாக ஜிப்ரான் அமைத்துள்ளார். மேலும் ராக்கி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்துக்கும் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைக்கிறார்.
படத்தின் பின்னணி இசையை சாம் சிஎஸ் கவனிக்கிறார். இதனால் யுவன் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் நானே வருவேன் பாடல்கள் யுவனை மீண்டும் முன்னணி இசையமைப்பாளராக மாற்றும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.