நடிகை ஷாலினி பெயரில் ட்விட்டரில் கணக்கு துவங்கப்பட்டு நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படமும், அதில் பகிரப்பட்டிருந்தது. அந்தப் பதிவில், ட்விட்டரில் இணைவது மகிழ்ச்சி. முதல் பதிவாக எனது கணவர் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ரசிகர்கள் பலரும் அந்தப் பக்கத்தை பின்தொடரத் துவங்கினர். யாஷிகா உள்ளிட்ட பிரபலங்களும் அவரை வரவேற்று பதிவிடத் தொடங்கினர். இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மேலாளரும், பிரபல மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா இது போலியான பக்கம் எனவும், நடிகை ஷாலினிக்கென ட்விட்டர் பக்கம் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிக்க | 'காதலில் விழத் தயாராகுங்கள்': வருகிறது டானின் அடுத்த பாடல்
நடிகர் அஜித்தும், நடிகையும் ஷாலினியும் எந்த சமூக வலைதளபக்கத்திலும் இல்லை. இருவரும் பொது நிகழ்வுகளில் அரிதாகவே கலந்துகொள்கின்றனர். என்னை ரசிகர்கள் திரையில் பார்த்தால் போதும் என்ற கொள்கையுடன் இருக்கிறார் நடிகர் அஜித்.
கடைசியாக தல என்றோ, வேறு பட்டப்பெயர்கள் கொண்டோ அழைக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இருவரும் புகழ் வெளிச்சத்தை விரும்பாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.
கடைசியாக நடிகை ஷாலினி தனது சகோதரர் ரிச்சர்டு ரிஷியின் ருத்ர தாண்டவம் படத்தைக் காண திரையரங்கு வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.