ஜி தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரின் நடிகை மௌனிகா தற்போது சன் டிவியின் தாலாட்டு தொடரில் களமிறங்கவிருக்கிறார்.
சன் டிவியில் கிருஷ்ணா - ஸ்ருதி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தாலாட்டு. இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் தொடரில் தாரா என்ற வேடத்தில் செய்தி தொகுப்பாளர் மலர் நடித்து வந்தார்.
இந்தத் தொடரில் முக்கியமான எதிர்மறை கதாப்பாத்திரத்தில் மலர் நடித்து வந்தார். அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களால் மலர் அந்தத் தொடரில் இருந்து விலகுகிறார்.
அவருக்கு பதிலாக செம்பருத்தி தொடரில் நந்தினி நடித்து வரும் மௌனிகா மலரின் தாரா வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் வானத்தை போல, ரெட்டை ரோஜா தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் இன்றிலிருந்து (பிப்ரவரி 3) தாராவாக மௌனிகா நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
மலர் தற்போது சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடர்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வாசிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன காரணத்துக்காக தாலாட்டு தொடரில் இருந்து அவர் விலகினார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும்.