விக்ரம், துருவ் இணைந்து நடித்த மகான் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 10) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | 'விஜய்யின் மகன் இயக்கத்தில் நடிக்கத் தயார்': துருவ் விக்ரம் அதிரடி
அவரது பதிவில், ''சிறப்பான திரைப்படம். நடிகர்களின் நடிப்பு அருமை. நேர்த்தியான பணி என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார். ரஜினிகாந்த்துக்கு மகான் மிகவும் பிடித்திருக்கிறது. தொலைபேசி மூலம் அழைத்து பாராட்டியதற்கு நன்றி தலைவா. நாங்கள் பெருமையாக உணர்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த்துக்கு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ரஜினி ரசிகராக பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் அவரைக் கையாண்ட விதம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது.