சூரரைப் போற்று படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ள நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று திரைப்படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை என 5 தேசிய விருதுகள் கிடைத்தது.
இந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூரரைப் போற்று சிறப்பு திரையிடலாக திரையரங்குகளில் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் பார்த்த சுதா கொங்கரா, சூர்யாவுடன் அடுத்தப் படத்திலும் இணையவிருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்டுள்ளார்.
அதில், என் அப்பா இறந்த தருணத்தில் இருந்துதான் இந்தப் படத்துக்கான பயணத்தை நான் துவங்கினேன். நான் கதவின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, படுக்கையில் படுத்திருந்த என் அப்பா சைகையில் பேசியது நிழற்படமாய் என்னுள் தங்கிவிட்டது. அதனை ஒரு காட்சியாய் சூரரைப் போற்று படத்தில் வைத்திருந்தேன்.
இதையும் படிக்க | ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த ஆலியா பட்
திரைப்பட இயக்குநராக நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையின் சில தருணங்களை காட்சிகளாக உருவாக்குவோம். வாழ்க்கையின் சில முக்கிய தருணங்களுக்கு நன்றி அப்பா. நான் அதனை சூரரைப் போற்று படத்தில் பதிவு செய்திருக்கிறேன். என்னுடைய ஒரே வருத்தம் எனக்கு விருது அறிவிக்கப்பட்டபோது அதனை காண்பதற்கு நீங்கள் இல்லை என்பதுதான்.
என் குருவிற்கு நன்றி. மணி சார் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை என்றால் நான் என்னவாகியிருப்பேன். பூஜ்ஜியமாக இருந்திருப்பேன்.
கேப்டன் கோபிநாத் மற்றும் சூர்யாவிற்கு நன்றி. ஒருவர் என்னை நம்பி தன் வாழ்க்கை கதையை ஒப்படைத்தார். மற்றொருவர் திரையில் வாழ்ந்தார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், பணிபுரிந்த ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. உங்களைப் பற்றி குறிப்பிடுவதற்கு மகாகவி பாரதியாரின் வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை. சூரரைப் போற்று.
ஜி.வி, பூர்ணிமா, டாக்டர் விஜய் ஷங்கர் ஆகிய என் நண்பர்களுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்தேன். நீங்கள் அளித்த வரவேற்பு என்னை உயிர்ப்பிக்க செய்தது. என்று குறப்பிட்டுள்ளார்.