சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி - கமல், அஜித் - விஜய் என தமிழ் சினிமாவில் நடிகர்கள் மத்தியில் எப்பொழுதும் ஒரு போட்டி இருந்துகொண்டே இருக்கும். நடிகர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் மோதிக்கொள்வார்கள்.
சமூக வலைதளங்களின் வருகைக்கு பிறகு ஹேஷ்டேக் மூலம் ஒருவரது ரசிகர்கள் மற்றொருவரது ரசிகர்களும் கடுமையாக விமர்சித்துக்கொள்வதும் அவ்வப்போது நடக்கும்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதியும் ஒரே காலக்கட்டத்தில் நடிகர்களாக அறிமுகமானார்கள். விஜய் சேதுபதி முன்னதாகவே சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக தாமதாமாகவே அறிமுகமானார்.
இதையும் படிக்க | '6 ஆண்டுகளுக்கு பிறகு...' புதிய தோற்றத்தில் நடிகர் கார்த்தி
நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படமும், விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படமும் ஒரே நாளில் வெளியாகி வெற்றிபெற்றன. பின்னர் விஜய் சேதுபதியின் றெக்க படமும், சிவகார்த்திகேயனின் ரெமோ படமும் ஒரே நாளில் வெளியாகின. இதன் பிறகு விஜய் சேதுபதி வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என தனது பாதையை மாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
மாவீரன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்கவைக்க தயாரிப்பு நிறுவனத்தினர் அவரை அணுகியுள்ளனராம். விரைவில் இதுகுறித்து விஜய் சேதுபதி முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.