சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து நடித்திருந்த இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம், ரஜிஷா விஜயன், எம்.எஸ். பாஸ்கர், குமாரவேல், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | வெந்து தணிந்தது காடு - சிம்பு வெளியிட்ட புதிய ’அப்டேட்’
எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்தப் படம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். சமூகத்தில் பெரிய தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது சூரரைப் போற்று படத்துக்கு கிடைத்தது போல, வருகிற 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது ஜெய் பீம் படத்துக்கு கிடைக்கும் என்பது அனைவரின் கணிப்பாக உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு மேலும் ஒரு கௌரவமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறவிருக்கிற இந்திய திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்படவிருக்கிறதாம். அங்கும் சில விருதுகளை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துகாத்திருக்கின்றனர்.