
சாய் பல்லவிக்கு ஆதரவாக பிரபல நடிகையும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யா கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி தற்போது ராணாவுடன் இணைந்து விராட பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக சாய் பல்லவி அளித்த பேட்டியொன்றில், நான் நடுநிலையான குடும்பத்தில் வளர்ந்தவள். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று எனக்கு என் வீட்டார் கற்றுக்கொடுத்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்கள் பாதுக்காக்கப்பட வேண்டும்.
இடதுசாரி மற்றும் வலதுசாரி என இரண்டும் நமக்கு தெரியும். ஆனால் யார் சரியானவர்கள், யார் தவறானவர்கள் என்பதை நம்மால் ஒருபோதும் சொல்ல முடியாது.
காஷ்மீர் பண்டிதர்கள் அந்த காலத்தில் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படம் காட்டுகிறது. மத முரண்களைப் பிரச்னையாக எடுத்துக்கொண்டால், சமீபத்தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றிருந்த முஸ்லிம் வாகன ஓட்டி ஒருவர் தாக்கப்பட்டு ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? நாம் நல்ல மனிதராக இருக்காவிட்டால், இடதுசாரியாக இருந்தாலும், வலதுசாரியாக இருந்தாலும் நீதி கிடைக்காது. நான் நடுநிலையானவள்.
இதையும் படிக்க | சர்ச்சைக்குள்ளாகும் சாய் பல்லவியின் பேச்சு!
நீங்கள் என்னைவிட வலிமையானவராக இருந்து என்னை ஒடுக்கினால் நீங்கள் தவறானவர். பெரிய எண்ணிக்கையிலான மக்கள் சிறிய எண்ணிக்கையிலுள்ள ஒரு குழுவினரை ஒடுக்கினால் அது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
அவரது கருத்துக்கு ஆதரவு கிடைத்து வரும் அதே வேளையில் கடுமையான எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இதனையடுத்து சாய் பல்லவிக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் தமிழில் குத்து, பொல்லாதவன் போன்ற படங்களில் நாயகியாக நடித்த திவ்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சாய் பல்லவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து திவ்யா தெரிவித்ததாவது, சாய் பல்லவியை விமரிசிப்பதும், அவருக்கு மிரட்டல் விடுப்பதும் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள் என எல்லா நல்ல மனிதர்களும் சொல்வதைத் தான் சாய் பல்லவியும் சொல்கிறார்.
இரக்கத்துடன் இருங்கள். நல்ல மனிதராக இருங்கள் என இன்று ஒருவர் சொல்வது தேசியத்திற்கு எதிரானதாக முத்திரை குத்தப்படுகிறது. கோலி மாரோ என பேசும் ஒருவரை உண்மையான நாயகன் என முத்திரைக் குத்தப்படுகிறார் என பதிவிட்டுள்ளார்.
The trolling & threats to @Sai_Pallavi92 must stop.Everyone is entitled to an opinion or is it that women alone aren’t?What she has said is what any decent human being would say- to be kind & to protect those who are oppressed. One can disagree with someone without being abusive.
— Divya Spandana/Ramya (@divyaspandana) June 16, 2022