தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளை விக்ரம் திரைப்படம் முறியடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. விக்ரம் படத்துக்கு மக்களின் ஆதரவு குறையவே இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் விக்ரம் படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தமிழில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் படம் 3வது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது. இந்தப் படத்தின் அனைத்து தமிழ் சினிமா வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என்று தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக லோகேஷ் வணக்கம் சொல்லும் ஸ்மைலியை பகிர்ந்துள்ளார்.
விக்ரம் படத்தில் கமல்ஹாசன் மற்றும் குழுவினர் சுரங்கப் பாதை வழியாக தப்பி செல்லும் காட்சி ஒன்று சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் படமாக்கப்பட்டது. இந்த நிலையில் படம் வெளியாகி மிகப் பெரியை வெற்றியை பதிவு செய்துள்ளதால் கமல்ஹாசன் தப்பி செல்லும் இடத்தை விக்ரம் குழுவினர் தப்பிசென்ற இடம் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் அந்த இடத்தின் முன் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.
விக்ரம் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தார். மேலும் இயக்குநர் லோகேஷ் மற்றும் அனிருத் ஆகியோர் கேரள திரையரங்கு ஒன்றிற்கு சென்று ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
அப்போது நடிகர் கமல் இயக்குநர் லோகேஷிற்கு காரையும் மற்றும் சூர்யாவிற்கு ரோலேக்ஸ் வாட்ச்சையும் பரிசாகக் கொடுத்தார். உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று அனிருத்திடம் ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு அனிருத் எனக்கு விக்ரம் படம் கொடுத்தார் என்று சொல்ல ரசிகர்களிடையே விசில் பறந்தது.
விக்ரம் படத்தில் ரோலேக்ஸ் என்ற சிறப்பு வேடத்தில் சூர்யா கலக்கியிருந்தார். அவரது காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. விக்ரம் 3யில் அவரது கதாப்பாத்திரம் முழுமையாக இடம்பெறும் என கமல்ஹாசன் பேட்டிகளில் தெரிவத்துவருகிறார். இதனால் சூர்யா ரசிகர்களும் விக்ரம் 3 படத்துக்காக ஆவலாக காத்திருக்கின்றனர்.