அண்ணாமலை திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியான அண்ணாமலை திரைப்படம் 30வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. பாலசந்தர் தனது கவிதாலாயா சார்பாக தயாரித்த இந்தப் படத்தில்தான் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் ரஜினிகாந்த்தும் முதன்முதலாக இணைந்தனர்.
பின்னர் வீரா, பாட்ஷா என இமாலய வெற்றிகளை இந்தக் கூட்டணி கொடுத்தது. ரஜினிகாந்த் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற படங்களில் அண்ணாமலை திரைப்படம் மிக முக்கியமானது என சொல்லலாம். நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள், அனல் பற்க்கும் சண்டைகாட்சிகள், பஞ்ச் வசனங்கள் என ஒரு நல்ல கமர்ஷியல் சினிமாவுக்கு அண்ணாமலை இலக்கனமாக அமைந்தது.
இதையும் படிக்க | விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் வெளியானது
90களின் குழந்தைகளால் அவ்வளவு எளிதில் அண்ணாமலையை மறந்துவிடமுடியாது. சாதுவான பால்காரனான அண்ணாமலை, தனது நண்பனின் துரோகத்தால் எப்படி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார் என மிக சுவாரசியமாக திரைக்கதை அணைத்திருப்பார் சுரேஷ் கிருஷ்ணா.
சுரேஷ் கிருஷ்ணாவுக்கு முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் வசந்த் இயக்க ஒப்பந்தமானதாகவும், தன்னால் இந்தப் படத்தை இயக்க முடியாது என மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
தேவா - வைரமுத்து கூட்டணியில் வந்தேண்டா பால்காரன் , கொண்டையில் தாழம்பு என கொண்டாட்டமான பாடல்கள் ஒரு புறம் என்றால், ஒரே பாட்டில் ரஜினிகாந்த் பணக்காரனாகும் வெற்றி நிச்சயம் பாடல் இன்றளவும் பலருக்கு தன்னம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கிறது.
முக்கிய காட்சியில் ரஜினிகாந்த், சரத் பாபுவிடம், அசோக் இந்த நாள உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ என ரஜினிகாந்த் பேசும் முழு வசனத்தையும் டிக் டாக் இல்லாத அந்த காலத்திலேயே ரசிகர்கள் பேசி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் அண்ணாமலை திரைப்படம் வெளியாகி 30வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சந்தித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.