நடிகை மீனாவின் கணவர் மரணம் குறித்து ஊடகங்களுக்கு நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவரது மறைவு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகை மீனா - வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். தெறி படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நைனிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் செய்தியில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நடிகை மீனாவிற்கு எனது குடும்பத்தினர் சார்பாக இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு தனது இரங்கல் பதிவில், ''நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நம்மிடையே இல்லை என்று கேள்விப்பட்டு மனமுடைந்தேன். அவர் நுரையீரல் பிரச்னை காரணமாக நீண்டநாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். வாழ்க்கை மிக குரூரமானது. மீனா மற்றும் அவரது மகளை நினைத்து என் மனம் வலிக்கிறது. இதற்கு மேல் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது மற்றொரு பதிவில், ''சற்று பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என ஊடகத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவர் 3 மாதங்களுக்கு முன்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். கரோனா அவரது நுரையீரலை வெகுவாக பாதித்தது. தயவுசெய்து அவர் கரோனாவால் இறந்ததாக தவறான தகவலை பரப்பி, மக்களை அச்சமுறுத்தாதீர்கள். நம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்தான் ஆனால் தயவுசெய்து அச்சமுறுத்தாதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.