இளையராஜா சமீபத்தில் துபையில் நடைபெற்ற துபை எக்ஸ்போ நிகழ்ச்சியில் தனது இசைக்கச்சேரியை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இசை நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தனர்.
இதன் ஒரு பகுதியாக இளையராஜா ரஹ்மானின் ஃபிர்டாஸ் ஸ்டுடியோவிற்கு சென்றார். அவருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஸ்டுடியோவைக் காட்டினார்.
அப்போது எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்த ரஹ்மான், ''எங்களது ஃபிர்டாஸ் ஸ்டுடியோவிற்கு மேஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவில் எங்களது ஃபிர்டாஸ் இசைக்குழு இசைப்பதற்காக ஒரு இசையை உருவாக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இருவரையும் இணைத்து பார்ப்பது எங்களுக்கு அற்புதமான நாள் என பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பதிலளித்த இளையராஜா, ''கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.