தேசிய திரைப்பட மேலாண்மைக் கழகம் நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து 100 பெண் திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்க பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மகளிர் நாளை முன்னிட்டு இந்திய தேசிய திரைப்பட மேலாண்மைக் கழகம்(என்டிஎஃப்சி) பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் 100 பெண் திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்கும் பயிற்சியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி, கானொலி மூலம் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தொழில் வல்லுநர்கள், சுயாதீன எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் உள்ளிட்டோர் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
பயிற்சி முடிந்த 30 நாள்களுக்குள் திரைக்கதையை சமர்பித்தால் ஒவ்வொரு பங்கேற்பாளரும் என்டிஎஃப்சி மற்றும் நெட்பிளிக்ஸ் அதிகாரிகளின் கூட்டுக் குழுவால் விரிவான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட ஸ்கிரிப்ட்கள் என்டிஎஃப்சி திரைக்கதை ஆய்வகத்திற்கு அல்லது என்டிஎஃப்சி ஃபிலிம் பஜாரில் தேர்ந்தெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்டிஎஃப்சி -யின் நிர்வாக இயக்குநர் ரவீந்தர் பாகர், ’இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை வழங்கும்’ எனத் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்கள் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் முனிஷ் பரத்வாஜின் கீழ் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.