இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இணைய உள்ளதாக பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
‘ஆடுகளம்’ ‘விசாரணை’ ‘அசுரன்’ ‘வடசென்னை’ என வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் வெற்றிமாறன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், விடுதலை படத்திற்குப் பின் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக இணைய இருப்பதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘கிராமிய கானா பாடகராக என் கலைவாழ்வைத் தொடங்கி இருந்தாலும் இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய் மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். கடைசிவரை கற்றுக்கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக்கொண்ட வெற்றிக்கு என் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.