நடிகர் விஜய்யை இயக்குவது குறித்த ரசிகரின் கேள்விக்கு பிரேமம் திரைப்பட இயக்குநர் பதிலளித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்தப் பாடலை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | இரவின் நிழல் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியீடு
இந்நிலையில் நடிகர் விஜய்யை இயக்குவது குறித்து பிரேமம் திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளது தற்போது வேகமாக பரவி வருகிறது.
பீஸ்ட் திரைப்பட பாடலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர், “காதல் கதையம்சத்தைக் கொண்ட திரைப்படத்தை தளபதியை (நடிகர் விஜய்) வைத்து நீங்கள் இயக்கினால் கட்டாயம் வெற்றி பெறும். வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பு இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், “பிரேமம் திரைப்படம் வெளியானதற்கு பிறகு தன்னுடைய உதவியாளர் மூலமாக தமிழகத்திலிருந்து அழைத்துப் பேசிய முதல் நபர் தளபதிதான் (நடிகர் விஜய்). அவரை ஒரே ஒருமுறை நேரில் சந்தித்து பேசினேன். விரைவில் புதிய திரைப்படத்தை இயக்க அவர் என்னை அழைப்பார் என நம்புகிறேன். நான் காத்திருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க | வெளியானது ‘ஜாலியோ ஜிம்கானா’
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் கேரளத்தைத் தாண்டி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. பிரேமம் இயக்குநரும், நடிகர் விஜய்யும் இணைந்து பணியாற்றினால் அது வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.