நயன்தாராவுடன் திருமணம்: பெரியப்பாவுக்கு ஏன் சொல்லவில்லை விக்னேஷ் சிவன்?

திருமணம் பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காதது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் - மாணிக்கம்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் - மாணிக்கம்
Published on
Updated on
3 min read

நயன்தாராவைத் திருமணம் செய்வது குறித்து தனக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் கூறியுள்ளார் . 

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.

இந்நிலையில் ஜூன் 9 அன்று திருப்பதியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் விக்‌ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். திருச்சி மாவட்டம் லால்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது மனைவி மீனாகுமாரி. சென்னை வடபழனி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு  பெற்றவர். இவர்களுக்கு விக்னேஷ் சிவன், ஐஸ்வர்யா என இரண்டு குழந்தைகள். இவர்களது பூர்வீகம் லால்குடி என்றாலும், பணிநிமித்தம் காரணமாக, கடந்த, 1971ம் ஆண்டே சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். சிவக்கொழுந்து, சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அவர் உயிருடன் இல்லை. 

நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்வது பற்றி, லால்குடியில் வசிக்கும் அவருடைய பெரியப்பா மாணிக்கம் (78), தினமணி நிருபரிடம் கூறியதாவது:

என் தாய், தந்தைக்கு 8 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள். நான் தான் குடும்பத்திற்கு மூத்தவன். பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். விக்னேஷ் சிவனின் தந்தை எனக்கு அடுத்து பிறந்தவர். ஒன்றாகக் கூட்டுக்குடும்பாக வசித்த நாங்கள், திருமணம் மற்றும் வேலை நிமித்தம் காரணமாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறோம். குழந்தைப் பாக்கியம் இல்லாத நாங்கள், என்னுடைய தம்பி குழந்தைகளான விக்னேஷ் சிவனையும் ஐஸ்வர்யாவையும் சொந்தக் குழந்தை போலவே பாவித்தோம். எனது தம்பி இறந்த பிறகு விக்னேஷ் சிவன் உள்ளிட்ட  யாரிடமும் ஒட்டுறவு இல்லாமல் போய்விட்டது.

விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவைத் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கேள்விப்பட்டேன். எங்களுக்குக் குழந்தைகள் இல்லாத குறையை போக்கியவர்கள் விக்னேஷ் சிவனும் ஐஸ்வர்யாவும். கடந்த சில வருடங்களாக எந்த ஒரு உறவும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். விக்னேஷ் சிவன் அவனுடைய தங்கையின் திருமணத்துக்கு எங்களை அழைக்கவில்லை என்பதே பெரிய மனவருத்தமாக இருந்தது. இப்போது அவனுடைய திருமணம் பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காதது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் விக்னேஷ் சிவன் எனது மகன். எங்கிருந்தாலும் நலமோடு வாழ வேண்டும் என்பதே எங்களது ஆசை என்றார். 

விக்னேஷ் சிவனின் இளவயதுப் புகைப்படங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com