அக்ஷய் குமார் நடிப்பில் சூர்யவன்ஷி என்கிற படத்தை இயக்கினார் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகி அதிக வசூலைப் பெற்றது. 5 நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கடைசியாக வெளியான 9 படங்களும் குறைந்தது ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளன. இதனால் அவர் புதிய சாதனையை நிகழ்த்தினார். ரோஹித் ஷெட்டி இயக்கிய சென்னை எக்ஸ்பிரஸ், கோல்மால் அகைன், சிம்பா ஆகிய படங்களின் வசூல் ரூ. 200 கோடியை எட்டியுள்ளன. சூர்யவன்ஷி பட வசூல் ரூ. 200 கோடிக்குச் சற்று குறைவான வசூலை இந்தியாவில் அடைந்தது.
இந்நிலையில் ரோஹித் ஷெட்டியின் அடுத்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே நடிப்பில் சர்க்கஸ் என்கிற படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். தீபிகா படுகோன், அஜய் தேவ்கன் கெளரவ வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். சிம்பா, சூர்யவன்ஷி படங்களுக்கு அடுத்ததாக ரோஹித் ஷெட்டியும் ரன்வீர் சிங்கும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
இந்த வருட கிறிஸ்துமஸ் சமயத்தில் டிசம்பர் 23 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.