ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகாரில் வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2டி தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த 'ஜெய் பீம்' படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி பலத்த பாராட்டைப் பெற்றது.
இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் ஜெய்பீம் படம் தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும் குறிப்பிட்ட சமூதாயத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலும் உள்ளதால் சூர்யா படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பு புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை மே 20-ம் தேதி தாக்கல் செய்ய வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.