பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தின் படப்பிடிப்பை விரைவில் அசாமில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்தப் படமான எமர்ஜென்சி திரைப்படத்தை எழுதி இயக்குகிறார்.இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது அந்தப் படத்திற்காக படப்பிடிப்பு நடத்துவதற்கு சில நாட்களாக இடம் தேடி வருகிறார் ரணாவத். அதன் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் கங்கனா ரணாவத் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை!
இது குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக அசாமின் காசிரங்கா மற்றும் கர்பி-அங்லாங் பகுதிகளில் படப்பிடிப்புக்காக சரியான இடம் தேடி வருகிறோம். நான் அசாமிற்கு பலமுறை வந்துள்ளேன். படப்பிடிப்பு நடத்துவதற்கு அசாமில் பல அழகான இடங்கள் உள்ளன. நான் மீண்டும் என்னுடைய முழுப் படக்குழுவினருடன் அசாமிற்கு வருவேன் என்றார்.
தனது இந்தப் பயணத்தின்போது மரியாதை நிமித்தமாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கங்கனா ரணாவத் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.