பொதுவாக தமிழ் படங்களில் ஹீரோக்கள். புத்திசாலியாக, தைரியசாலிகளாக காட்டப்படுவார்கள். மாறாக, ஹீரோயின்கள் மழையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, டான்ஸ் ஆடுவது என வெகுளியாக எதுவும் தெரியாததுபோல காட்டப்படுவது அதிகமாக இருக்கிறது.
படங்களில் ஹீரோக்களை காதலிப்பதைத் தவிர வேறு வேலை இருக்காது. ஆனால், இந்த விதிகளுக்கு நேர்மாறாக வந்த வெகு சில படங்களில் ஒன்றுதான் 'நானும் ரௌடி தான்'.
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கிய படம் 'நானும் ரெளடி தான்' திரைப்படம். இத்திரைப்படம் நயன்தாராவின் திரையுலக பயணத்தில் ஒரு சிகரமாக அமைந்தது எனலாம். இந்த படத்தில் நயன்தாரா(காதம்பரி) காதுகேளாத கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நயன்தாரா சொந்தக் குரலில் பேசி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
பாண்டிச்சேரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் மீனா குமாரி (ராதிகா)வின் மகன் பாண்டிக்கு (விஜய் சேதுபதி) அம்மா மாதிரி காவல்துறை அதிகாரி ஆகும் ஆசையில்லை. ஆனால் ராதிகாவிற்கு தன் மகனை காவல் துறை அதிகாரியாக்க வேண்டும் என்று ஆசை. அம்மாவின் காவல்துறை செல்வாக்கை பயன்படுத்தி நண்பர்களுடன் சேர்ந்து ‘நானும் ரெளடி தான்’ என்று சொல்லிக் கொண்டு திரிகிறார் பாண்டி.
ஒரு நாள் இரவு காணாமல் போன தன் தந்தையை காதம்பரி தேடும்போது பாண்டியை சந்திக்கிறார். செவித்திறன் குறைபாடுடைய காதம்பரி மீது காதலில் விழுகிறார்.
(ஃபிளாஸ்பேக்கில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய காவல் ஆய்வாளரான நயன்தாராவின் தந்தை ரவிக்குமார், பெரிய ரெளடிகளின் தலைவனான பார்த்திபனை (கிள்ளிவளவன்) கைது செய்கிறார். இதனால் கோபமடைந்த பார்த்திபன் வெடிகுண்டு பார்சலை நயன்தாரா வீட்டிற்கு அனுப்புகிறார். இந்த வெடிகுண்டு வெடித்து நயந்தாராவின் அம்மா இறந்து விடுகிறார். நயன்தாராவிற்கு செவித்திறன் பாதிப்படைகிறது.)
விரைவில் தனது அப்பா பார்த்திபனால் கொல்லப்பட்டதை அறிந்து அவரைப் பழிவாங்க காதம்பரி சபதமெடுக்கிறார். அதற்காக பாண்டி தன் மீது கொண்டுள்ள காதலைப் பயன்படுத்திக்கொள்கிறார்.
'எனக்கு காது கேட்காதுனு அவங்களுக்கு தெரிய வேண்டாம்' என குறையை மறைப்பது, 'நீங்க டான்லா இல்ல. நீங்க ஃபிராட்' என விஜய் சேதுபதியை கலாய்ப்பது, ஒருவர் பேசும்போது வாயைப் பார்த்து அவர் என்ன சொல்கிறார் என புரிந்து கொண்டு தயங்கி தயங்கிப் பேசுவது என, தான் ஒரு தேர்ந்த நடிகை என அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.
விஜய் சேதுபதிக்கென ஒருசில ஹீரோயிசக் காட்சிகள் இருந்தாலும் இது முழுக்க முழுக்க நயன்தாரா படம். அந்த அளவுக்கு "காதலுடன்" நயன்தாராவின் கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருப்பார் விக்னேஷ் சிவன்.
மலையாள திரைப்பட உலககில் அறிமுகமான நயன்தாரா, தமிழில் 2005-ல் 'ஐயா' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சந்திரமுகி திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து பல முன்னனி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து, இந்த 17 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
அவர், 'லேடி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல ஒரு லேடி உலக நாயகனும்கூட'.