பிக் பாஸ் வீட்டில் ‘என்னை வெளியே அனுப்புங்க’ என்று நாள்தோறும் தனலட்சுமி கூறிவருவது பிக் பாஸ் ரசிகர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், செரினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை சாந்தி, ஜி.பி.முத்து, அசல், செரினா, மகேஸ்வரி, நிவா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலமான தனலட்சுமி, பொதுமக்கள் சார்பாக வந்துள்ள இரண்டு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். இவர் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ‘என்னை வெளியே அனுப்புங்க’, ‘நான் வீட்டுக்கு போறேன்’ என்று அவ்வப்போது கூறி வருகிறார்.
தனலட்சுமியின் இந்த செயலுக்கு ஏற்கெனவே கமலும், பிக் பாஸும் அறிவுரை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், இந்த வார தலைவர் போட்டிக்கு தனலட்சுமி, மைனா, கதிரவன் ஆகியோர் தேர்வாகியிருந்தனர். வீட்டின் தலைவருக்கான போட்டி வாரத்தின் முதல்நாள் நடைபெறுவது வழக்கம்.
தலைவர் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, நான் தலைவரானால் இவர்களை எல்லாம் இந்த அணிகளிலிருந்து வேறு அணிக்கு மாற்றுவேன் என்று சக போட்டியாளர்களிடம் தனலட்சுமி பேசிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து, கால்பந்து விளையாட்டு போன்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மைனா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன் மனமுடைந்த தனலட்சுமி படுக்கையறைக்கு சென்று நான் வீட்டுக்கு போறேன், என்னை வெளியே அனுப்புங்க என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
மைனா கீழே விழுந்த நேரத்தில் அவரது ஆதரவாளர் கோல் அடித்ததாகவும், தனலட்சுமியின் தலைக்கு மேல் பந்து போனதால் மைனாவின் வெற்றியை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறினார்.
இதையும் படிக்க | நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதி
தொடர்ந்து, வீட்டின் பணிகளுக்கு குழு பிரிக்கும்போது மைனா ஏற்கெனவே குழுக்களை பிரித்துவிட்டு நம் முன்பு நடிக்கிறார் என்று மீண்டும் அழுதுகொண்டே வீட்டுக்கு போறேன் என கூச்சலிட, சக போட்டியாளர்கள் கடுப்பாகினர்.
இந்த விடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, தயவுசெய்து தனலட்சுமிக்கு வீட்டின் பிரதான கதவை திறந்துவிடுங்கள் பிக் பாஸ் என்று ரசிகர்கள் கடுப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.