தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு கடந்த சில நாள்கள் சோதனைக் காலமாகவே உள்ளது. மயோசிடிஸ் சிகிச்சை, தொடர் மருந்துகள், ஓய்வு என்ற இக்கட்டான சூழலுக்கு மத்தியில் சமந்தாவுக்கு தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது.
நடிகை சமந்தா நடிப்பில் உருவான 'யசோதா' திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
யசோதா திரைப்படத்திற்கு பின்னணி குரல் கொடுக்கும்போது சமந்தா, கையில் டிரிப்ஸுடன் இருந்தார். சிகிச்சையின்போது கூட யசோதா படத்திற்காக வந்து அவர் வேலை செய்துகொடுத்துவிட்டுச் சென்றார். இதனால், பெரும்பாலான ரசிகர்களின் கரிசனத்திற்கு பாத்திரமாக மாறினார் சமந்தா.
இதன் காரணமாகவே 'யசோதா' திரைப்படத்துக்கான வரவேற்பு தெலுங்கில் பெரிதாய் இருந்தது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சமந்தா வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வருவதாக, அவரின் உதவியாளர் தெரிவித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து பல சோதனைகளை அனுபவித்து வரும் சமந்தாவுக்கு மேலுமொரு சோதனை உருவெடுத்துள்ளது.
'யசோதா' படத்தில் சமந்தா தங்கியிருக்கும் மருத்துவமனையின் பெயர் இவிஏ என்று இருக்கும், இதனால், இவிஏ ஐவிஎஃப் மருத்துவமனை ஹைதராபாத் சிவில் நீதிமன்றத்தில் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, தங்களது மருத்துவமனையின் பெயரை வைத்து யசோதா படம் தவறான வகையில் மருத்துவமனையை சித்தரித்துள்ளது. இதனால், தங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இந்த வழக்கால், 'யசோதா' திரைப்படம் திட்டமிட்டபடி ஓடிடியில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.