பொன்னியின் செல்வன் படத்தின் விடியோ பாடல் வெளியான பிறகு காட்சி ஒன்று கவனம் பெற்றுள்ளது.
கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கியிருந்தார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது. இதுவரை ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளாக லைக்கா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
பொன்னியின் செல்வனிலிருந்து சோழா சோழா பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் ராட்சச மாமனே என்ற பாடல் வெளியாகியிருந்தது. பாடலில் தஞ்சைக்கு குந்தவையைச் சந்திக்க சேந்தன் அமுதனுடன் வந்தியத்தேவன் வருவார்.
அப்போது வந்தியத்தேவன் கம்சனாக வேடமணிந்து பாடலுக்கு நடனமாடுவார். அப்போது சேந்தன் குந்தவையையும் செம்பியன் மாதேவியையும் சந்திப்பார். குந்தவை வந்தியத்தேவனை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சேந்தன் அமுதனும் செம்பியன் மாதேவியும் ஒருவரையொருவர் வாஞ்சையுடன் பார்த்துக்கொள்வர்.
இது விடியோ பாடல் வந்தவுடன் தான் கவனித்ததாக ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு சேந்தன் அமுதனாக நடித்துள்ள நடிகர் அஸ்வின், எல்லோரும் குந்தவையை (திரிஷா) பார்த்ததால், இதனை யாரும் கவனிக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.
கதைப்படி பொன்னியின் செல்வனில் செம்பியன் மாதேவியின் உண்மையான வாரிசாக சேந்தன் அமுதன்தான் இருப்பார். இந்த உண்மை கடைசியில்தான் அனைவருக்கும் தெரியவரும்.