விக்ரம் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் பற்றி இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை காயத்ரி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரைன், காயத்ரி போன்றோர் நடித்தார்கள். ரசிகர்களிடம் பெரிய வரவேற்பும் சாதனை வசூலும் பெற்ற விக்ரம் படம் சமீபத்தில் 100-வது நாளைக் கொண்டாடியது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் பற்றி நடிகை காயத்ரி, இன்ஸ்டகிராமில் கூறியதாவது:
ஒரு படத்தில் ஒரு நடிகர் இறந்து போவது போல நடித்தால் அவர் கண் விழித்து எழுந்து சிரிப்பது போல ஒரு காட்சியையும் கூடுதலாக எடுப்பது வழக்கம். அந்த நடிகர் உயிருடன் உள்ளார், அவர் செய்தது நடிப்பு தான் என்று உலகத்துக்குச் சொல்வதற்காக இப்படிச் செய்யப்படும். விக்ரம் படத்தில் நான் இறந்த காட்சியைப் படமாக்கியபோது அப்படியொரு கூடுதல் காட்சியை எடுக்க மறந்து விட்டோம். நேரமின்மை காரணமாக லைட்டிங் ஏற்பாடுகளையும் மாற்ற முடியவில்லை. எனவே புதுமையாகச் செய்வதற்காக இதுபோல எடுத்தோம். (இயக்குநர், ஒளிப்பதிவாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் காயத்ரி) என்று எழுதியுள்ளார்.