நா.முத்துக்குமாரின் வரிகளை நினைத்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆச்சரியமடைந்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா, விவேக் உள்ளிட்டோர் நடித்த 'சாமி' திரைப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவுசெய்தது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவும் மிக பிரபலம்.
இந்தப் படத்தில் துவக்கப் பாடலான திருநெல்வேலி அல்வாடா என்ற பாடலை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருப்பார். அந்தப் பாடலில் திருநெல்வேலியின் சிறப்புகளை இடம்பெறச் செய்திருப்பார்.
இந்தப் பாடலில் இடம்பெற்ற பாளையங்கோட்டை ஜெயிலு பக்கம் ரயிலு கூவும் என்ற வரியை சுட்டிக்காட்டி, பாளையங்கோட்டை சிறைக்கு அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயில் செல்லும் விடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், இன்றுவரை எனக்கு இது தெரியாதே என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.