சில்க் ஸ்மிதா நினைவு நாள்: ‘பாரதிராஜா ஏற்படுத்திக் கொடுத்த திருப்பம்!’

நடிக்க வரும் போது கவர்ச்சியாகத்தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினீர்களா...
படம் - twitter.com/onlynikil
படம் - twitter.com/onlynikil


(சினிமா எக்ஸ்பிரஸ்  15.04.82 இதழ்)

வாஹினி ஸ்டூடியோவில், ராம நாராயணின் டைரக்‌ஷனில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' படப்பிடிப்பில் ஸ்மிதாவை சந்தித்த பொழுது, எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. 

ஏனெனில் ஸ்மிதா எத்தகைய உடையோடு எப்படிக் காட்சியளிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேனோ, அந்த மாதிரி இல்லாமல் குடும்பப் பெண்ணைப் போல, சேலை கட்டி ஜாக்கெட்டெல்லாம் சரியாகப்போட்டுக் கொண்டு, சர்வ அடக்கமாக காணப்பட்டார் என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்?

படப்பிடிப்பு இடைவேளைகளில் அவரிடம் பேசியதிலிருந்து:

'நடிக்க வரும் போது கவர்ச்சியாகத்தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினீர்களா?' என்ற கேள்விக்கு சில நிமிடங்கள் சிந்தித்த பின்பு ஸ்மிதா பதில் சொன்னார்.

புகைப்படங்கள்: என்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா!

கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். கவர்ச்சியாக நடித்தால் அவர் கவர்ச்சி வேடங்களுக்கு மட்டும் பொருத்தமானவர், கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்? இப்போதெல்லாம் சில நாவல்களைப்  படிக்கிற பொழுது அதில் வருகிற சீரியஸான  பாத்திரத்தை ஏற்று நடித்தால் எப்படியிருக்கும் என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வதுண்டு.

சிலுக்கு ஸ்மிதா எனும்போது படு கவர்ச்சி, குறைந்த உடைகள், மயக்கும் கண்கள் இப்படி ஒரு இமேஜ் ஏற்பட்டு விட்டதே? இந்த இமேஜை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறீர்களா? 

நிச்சயமாக! அதில் என்ன ஆட்சேபனை? நான் பெரும்பாலும் ஏற்று நடித்துள்ள கேரக்டர்கள் அப்படிப் பட்டவை.அதிலிருந்து எனக்கு அந்த மாதிரி ஒரு இமேஜ் உருவாகியிருக்கிறது.  என்றால் அது என்னுடைய கேரக்டர்களுக்கு கிடைத்த வெற்றியே  தவிர வேறு என்ன?

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் சிறந்த கேரக்டரில் தோன்றியது போல வேறு அந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறீர்களா?

வண்டிச் சக்கரத்திற்கு பிறகு கிளாமரான ரோல்களே வந்து கொண்டிருந்த பொழுது, பாரதிராஜா எனக்கு முற்றிலும் வித்தியாசமான வேஷத்தைக் கொடுத்து என்னுடைய நடிப்புத் துறையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். பாரதிராஜா துணிச்சலாக எனக்கு அந்த வேடத்தைக்  கொடுத்தார். அதே போல் இன்னொரு கேரக்டர் பண்ணணும்கிற ஆசையிருக்கு. ஆனால் அது மாதிரி அழகா அமையணுமே. ஐம்பது பர்சென்ட் நம்பிக்கையிருந்தால் கூட முயற்சி பண்ணலாம்.

'இப்போ நீங்க நடிச்சுகிட்டுஇருக்கற கேரக்டர்கள்..' என்று அடுத்த கேள்வியை ஆரம்பிக்கும் போதே ஸ்மிதா கேள்வியை புரிந்து கொண்டு..

எல்லாமே கதையோட ஒன்றிப்போன கேரக்டர்கள்தான். கதையோட கலந்த கதாபாத்திரமா இருந்தால்தான் படம் பாக்கிறவங்க மனசிலே நிக்கும். இப்ப நான் ஆறு படங்களில் கதாநாயகியா நடிச்சுகிட்டுஇருக்கேன். நான் ஹீரோயினை தேடிப்போகலே.. ஹீரோயின் என்னைத் தேடிவருது.

***



(சினிமா எக்ஸ்பிரஸ் 15.02.84 இதழ், பேட்டி: உத்தமன்)

உங்களுக்கு இப்போது படங்களில் வாய்ப்பு குறைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்வீர்களா?

நிச்சயமா ஒப்புக் கொள்ள மாட்டேன். எனக்கு டெய்லி படப்பிடிப்பு இருக்கு. இப்பவும் பிசியாத்தானிருக்கேன். போன வருஷம் வரிசையா நான் நடிச்ச படங்களாவே வந்திருக்கலாம். இப்போது அப்படி பார்க்கிறப்ப நான் நடிச்ச தமிழ்ப்படங்கள் குறைஞ்சிருக்கலாம். எனக்கு சான்ஸ் குறைஞ்சு போச்சு, சிலுக்குக்கு மார்க்கெட் குறைஞ்சு போச்சு அப்டின்னு சொல்றவங்களப் பத்தி நான் கவலைப்பட முடியாது.

சிலுக்கு இல்லாமல் படம் ஓடாது என்ற நிலை இருந்தது..இப்போது அந்த நிலை மாறிவிட்டது அல்லவா? இதை மறுக்க முடியுமா?

சிலுக்கு இல்லாமல் படம் ஓடாதுன்னு நான் சொன்னேனா? யார் யாரோ அவங்க இஷ்டத்துக்கு துதி பாடிகிட்டிருந்தாங்க..என்னைத் தேடி வாய்ந்த வாய்ப்பை எல்லாம் மறுக்காம ஒப்புக்கிட்டு நடிச்சேன். ஒரு சீன், ரெண்டு சீ ன், ஒரு நாள் கால்ஷீட், ரெண்டு நாள் கால்ஷீட் னு எல்லாம் கேட்டாங்க.

மறுக்காம நடிச்சு கொடுத்தேன். அவங்க படம் ஓடுறதுக்கும் ஓடாததுக்கும் நானா பொறுப்பு? எத்தனை பெரிய நடிகர் நடிகை நடிச்சிருந்தாலும்,பெரிய டைரக்டர் இருந்தாலும், கதையில வெய்ட் இல்லனா படம் ஓடாது. எனக்கு படங்கள் ஓரளவு குறைஞ்சதுக்கு காரணம்- நானே குறைச்சுக்கிட்டதுதான். பேசுறவங்களுக்கு வேற வேலையே கிடையாது.

சினிமா உலகத்தை பத்தி விமர்சிக்கிறவங்க 'சிலுக்கை நம்பி இருக்கும் போக்கு மாற வேண்டும்' அப்டினு பேசுவதைக் கேட்கும்போது எப்படியிருக்கும்?

என் மேல தனிப்பட்ட முறையில அவங்களுக்கு எந்த விரோதமும் இருக்கிறதுக்கு நியாமில்லை. பொதுவா சினிமாவை பத்தின விமர்சனும்னு எடுத்துக்குவேன். என் பெயரைச் சொல்லி விமர்சனம் பண்ணுறவங்க மேல எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்ல.  அப்படி யாருக்காவது கோபம் இருந்தா நான் கால்ஷீட் கொடுக்கலையே அப்டிங்குற கோபமாத்தான் இருக்கும்.

சில படங்களில் கால்ஷீட் விஷயத்தில் படப்பிடிப்புக்கு ஓத்துழைப்பு தரவில்லை என்ற புகார் பற்றி?

சில நேரங்களில் ஓவர் ஒர்க் காரணமா எனது உடல்நிலை சரியில்லாம இருந்திருக்கும் போது எப்போதாவது ஒரு முறை தாமதமாக வந்திருக்கலாம். அது பட உலகில் சாதாரணமான விஷயம்.  அதுக்காக நான் தாமதமாக வருவேன், ஷூட்டிங் கேன்சல் பண்ணுவேன், ஒத்துழைக்க மாட்டேன்னு சொல்றதெல்லாம் மிகைப்படுத்தி சொல்றதே தவிர வேற எதுவும் இல்ல. 

(இன்று சில்க் ஸ்மிதாவின் நினைவு நாள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com