பழம்பெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.
சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், கே. விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டில் 1960, 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஜராத்தைச் சேர்ந்த 79 வயது ஆஷா பரேக். அவருக்கு 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார். 1952 முதல் 1999 வரை திரைத்துறையில் நடிகையாகப் பணியாற்றினார். 1992-ல் ஆஷா பரேக்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்த வருடங்களில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், வினோத் கன்னா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.