எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விக்ரம் கூறியதாவது:
அழகு ராணிகள் பலர் இருக்கலாம். ஆனால் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராய். அவருடைய படங்களை நான் பார்த்துள்ளேன். எனவே அழகில் மட்டுமல்ல அதையும் தாண்டி ரசிகர்களைக் கவரக்கூடியவர். எப்போதும் அவரைப் பல கண்கள் கவனித்துக் கொண்டிருக்கும். எனவே எப்போதும் அழகாக இருக்க வேண்டிய நிலைமை அவருக்கு உள்ளது. அதைத் தன் பாணியில் எப்படிச் செய்து வருகிறார் எனக் கவனித்து வருகிறேன்.
நாங்கள் இருவரும் திரையில் சரியான ஜோடி என ரசிகர்கள் கூறுவார்கள். ஆனால் அவரை என் படத்தில் நடிக்கக் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஒரு ஷாட்டில் அவ்வளவு அற்புதமாக நடனமாடினார். நான் நடிப்பதை மறந்து விட்டேன். அவருடைய நடனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
பொன்னியின் செல்வன் படத்தில் என் கனவுக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.