நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஃபகத் ஃபாசில் மலையாளத்திலும் தமிழிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது அசாத்தியமான நடிப்பினால் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல்வேறு படங்களுக்கு பல விருதுகளை குவித்துள்ளார்.
இன்று(ஆக. 8) ஃபகத் ஃபாசிலின் பிறந்தநாளையொட்டி சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'வணக்கம் பகத் சார்!!!
உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர். அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்' என்று பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபகத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.