அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
அனிமல் படத்தில் ‘ஜோயா’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறார் நடிகை ட்ரிப்தி டிம்ரி .
2017இல் போஸ்டர் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானாலும் ‘லைலா மஜ்னு’, ‘புல்புல்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். இவரது அழகான தோற்றம் மட்டுமின்றி கச்சிதமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் ட்ரிப்தி டிம்ரி இந்தியாவின் ‘புதிய நேஷ்னல் க்ரஷ்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். படத்தில் வரும் ‘அண்ணி-2’ என்ற வார்த்தையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது.
ட்ரிப்தி டிம்ரியின் இன்ஸ்டாகிராமில் கடந்த வாரம் 711ஆயிரம் பேர் பின்தொடர்பவர்களாக இருந்தனர். தற்போது 30 இலட்சம் (3 மில்லியன்) ஆக அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு டிரெண்டாகி வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், “ரன்பீருடன் வரும் அந்த நெருக்கமான காட்சிகளை பார்த்துவிட்டு எனது பெற்றோர்கள் சிறிது அசௌகரியம் அடைந்தார்கள். அதிலிருந்து வெளியே வர நேரம் எடுத்துக் கொண்டார்கள். நான் இதை செய்திருக்க வேண்டாமென கூறினார்கள். ஆனால் ஓக்கே என்றும் கூறினார்கள்.
எனது வேலைக்கு நான் உண்மையுடன் இருக்கிறேன். இயக்குநர், நான், கேமிரா மேன், ரன்பீர் என நால்வர் மட்டுமே இருந்தோம் அந்தக் காட்சியை படமாக்கும்போது. எதாவது அசௌகரியம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் என இயக்குநர் கூறினார். பாதுகாப்பாக உணர்ந்ததால் மட்டுமே நடித்தேன். எனக்கு கிடைத்த வரவேற்பினை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.