சினிமா இவ்வளவு கடினமாக இருக்கும் எனத் தெரியாது என்று சென்னையில் நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய இருநாள் கல்விச் சிந்தனை அரங்கின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு ‘கலை மற்றும் வாழ்க்கை’ என்ற தலைப்பில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.
அவர் பேசியதாவது, “எதிர்த்து பேசுவதும், எதிர்த்து செயல்படுவதும் இளையோரின் குணம். வாழ்க்கையில் சொந்த அறிவின் குரலைக் கேட்க வேண்டும். தன்னம்பிக்கை உரைகளைக் கேட்டு முடிவெடுக்காதீர்கள். சின்ன வயதிலிருந்து எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆனால் எல்லோருக்கும் ஒரு திறன் இருக்கிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது நமக்கு மாறுதல் உண்டாகிறது.
மக்கள் தங்களது உழைப்பால் உண்டான தங்களது பணத்தையும், நேரத்தையும் கொடுத்து சினிமா பார்க்கின்றனர். அதற்கான பொறுப்புணர்வு எங்களிடம் இருக்க வேண்டும். சினிமா என்பது பொழுதுபோக்கானது அல்ல. இயக்குநர் ஜனநாதன் ஒருமுறை சொல்லும்போது மக்களுக்கு கற்பிப்பதற்கானது சினிமா எனத் தெரிவித்தார். பெண்களை மதிப்பதும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் கூட சினிமாவின் பொறுப்பு என அவர் எனக்குத் தெரிவித்தார். பல வரலாற்று நிகழ்வுகளை சினிமா ஆவணப்படுத்தியிருக்கிறது.
பல திரைப்படங்கள் காலம் கடந்து பாராட்டைப் பெறும். எனக்கும் கூட அப்படி நடந்திருக்கிறது. சினிமாவை தேர்ந்தெடுக்கும்போது இது இவ்வளவு கடினம் என எனக்குத் தெரியாது. சினிமாவிற்கு வரும்போது எனக்கு சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது. வாய்ப்புகளைக் கேட்கச் செல்வதைக் கூட நான் அசெளகரியமாகக் கருதியிருக்கிறேன். எல்லாத்தையும் புரிந்து கொள்ள சில காலம் தேவைப்பட்டிருக்கிறது. என்றைக்கு நான் ஒரு காட்சியை சிறப்பாக செய்ய முடியும் என யோசித்தேனோ அன்றைக்குதான் என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.