அன்பும் சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம் என வடமாநில தொழிலாளர்கள் வருகை குறித்து மூடர்கூடம் இயக்குநர் நவீன் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதற்கு ஆங்காங்கே எதிர்ப்பு எழுந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்ட காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில் மூடர்கூடம் திரைப்படத்தின் இயக்குநர் நவீன் இதுதொடர்பாக டிவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கோவை தனியார் கல்லூரியில் வடமாநில தொழிலாளர்கள் - மாணவர்கள் மோதல்!
முன்னதாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இதேபோன்றதொரு பதிவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.