மம்மூட்டி நடிப்பில் வெளியாகியுள்ள நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் ஏலே படத்தின் அழகியலைத் திருடி உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஹலீதா ஷமீம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முகநூலில் ஹலீதா ஷமீம் பதிவிட்டுள்ளதாவது, 'ஏலே' படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து, முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே.
இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது.
ஐஸ்காரர் இங்கே பால்க்காரர்.
செம்புலி இங்கே செவலை.
அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது.
நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார்.
படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன்.
நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன!
எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன்.
நீங்கள் என் படத்தை நிராகரிக்கலாம். ஆனால் எனது சிந்தனையும், நான் தேர்வு செய்த அழகியலும் இரக்கமின்றி களவாடப்படும்போது நான் அமைதியாக இருக்கமாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹலீதா ஷமீம் முகநூல் பதிவு