இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது. இன்று அதிகாலை 5.12 மணிக்கு சலார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் கேஜிஎஃப் படத்திலிருந்த காட்சிகளுடன் ஒத்துப்போவதால் இது கேஜிஎஃப் - 2க்குப் பின்பான கதையாக உருவாகிவருவது உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க: துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
குறிப்பாக, கேஜிஎஃப் - 2ல் ராக்கிக்கு ஆதரவாக இருக்கும் சிறுவன் ஃபர்மான்(சரண் சக்தி) கதாபாத்திரம் ஆதிராவுடன் நடக்கும் சண்டையில் கொல்லப்படுவதைப் போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இறந்த ஃபர்மானின் முகத்தைக் காண அவனுடைய தாய் (ஈஸ்வரி ராவ்) முயற்சிக்கும்போது வேண்டாம் என தடுக்கப்படுவார்.
ஒருவேளை ஃபர்மான் சலார் நாயகனாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. காரணம், சலாரிலும் ஈஸ்வரி ராவ் நடித்திருக்கிறார். மேலும், ராக்கி தான் உருவாக்கிய கேஜிஎஃபை விட்டு செல்லும்போது தனக்காக உடன் இருந்த மக்களுக்கு புதிய கேஜிஎஃப் நகரை உருவாக்கியிருப்பார். சலார் கதைக்களம் இந்த நகரில் நடக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை டீசரும் உறுதி செய்கிறது.
எப்படி இருந்தாலும் சலார் கண்டிப்பாக கேஜிஎஃப் கதையுடன் பிணைந்தே உருவாக்கப்பட்டிருக்கும் என்றே மேக்கிங் தெரிவிக்கிறது!